விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் ஆண்டு விழாவை கொண்டாடிய இந்திய தொல்லியல் அமைப்பின் சென்னை வட்டம்


விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் ஆண்டு விழாவை கொண்டாடிய இந்திய தொல்லியல் அமைப்பின் சென்னை வட்டம்


மார்ச் 12, 2021 அன்று தொடங்கப்பட்ட விடுதலையின் அமிர்தப் பெருவிழா என்பது இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகள் மற்றும் சாதனைகளை கொண்டாடுவதற்கும் நினைவுகூர்வதற்குமான இந்திய அரசாங்கத்தின் முன்முயற்சியாகும். 

மத்திய பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களை ஒளிரச் செய்வது, புகைப்படக் கண்காட்சிகள் போன்ற நிகழ்ச்சிகளை இந்திய தொல்லியல் ஆய்வு மையம் ஆண்டு முழுவதும் நடத்தியது.  சுதந்திரப் போராட்டத்துடன் தொடர்புடைய ஆவணப்படங்களைப்  பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களில்  திரையிடுதல், சுதந்திரப் போராட்ட வீரர்களின்  நினைவைப்  போற்றுதல் மற்றும் கவுரவித்தல் போன்றவை பொது மக்கள் மற்றும் இளைய தலைமுறையினரிடையே தேசிய உணர்வை ஏற்படுத்துவதற்காக நடத்தப்பட்டன. 

விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் ஓராண்டு பயணத்தை நிறைவு செய்யும் வகையில், “சுதந்திரப் போராட்டம் மற்றும் தேசிய இயக்கத்தில் தமிழகத்தின் பங்கு” என்ற தலைப்பிலான சிறப்பு சொற்பொழிவை 12 மார்ச் 2022 அன்று சென்னை கோட்டை அருங்காட்சியகத்தில் இந்திய தொல்லியல் துறையின் சென்னை வட்டம் ஏற்பாடு செய்தது. 

சென்னை வட்ட தொல்லியல் துறை கண்காணிப்பாளர் திரு எம் காளிமுத்து நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து உரையாற்றினார். சென்னை மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப்  பேராசிரியர் திருமதி ஆரோக்கிய அன்பழகி , சுதந்திரப் போராட்டம் மற்றும் தேசிய இயக்கத்தில் தமிழகத்தின் பங்கு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். 

மிகவும் பிரபலமான தேசியப்  பிரமுகர்களை மட்டுமின்றி, தமிழ்நாட்டின் முக்கிய நிகழ்வுகள் மற்றும் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கை அவரது விரிவுரை வலியுறுத்தியது. மறைந்த புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரரும், சமூக ஆர்வலருமான திருமதி மஞ்சு பாஷினியின் பங்களிப்பை சென்னை வட்ட உதவி தொல்லியல் ஆய்வாளர் திருமதி வெற்றிசெல்வி எடுத்துரைத்தார். 

திருமதி மஞ்சு பாஷினியின் சார்பாக அவரது மருமகள் திருமதி லதா குமாரசாமி பங்கேற்று நினைவுப்பரிசைப்  பெற்றுக்கொண்டதோடு, திருமதி மஞ்சு பாஷினி குறித்து உரையாற்றினார். சென்னைப்  பல்கலைக்கழக மாணவர்கள் உரைகளால் பயனடைந்தனர். சென்னை வட்ட உதவித்  தொல்லியல் ஆய்வாளர் டாக்டர் ஆர் ரமேஷின் நன்றியுரையுடன் விழா நிறைவு பெற்றது.

Comments

Popular posts from this blog